Saturday, October 17, 2009
இது அவளுக்கு மட்டும்...
ஒரு வலியும் எனை சேராது காத்த
அவள் பெயர் உயிர்...
- - -
தான் உண்ணாது
நான் உண்பதை
கண்டு மகிழ்ந்த
அவள் பெயர் உயிர்...
- - -
ஆலமர ஆழ துன்பங்கள்
வந்த போதும்
ஒற்றை வேராய் தங்கி சுமந்த
அவள் பெயர் உயிர்...
- - -
அவளை காதலிக்க காதல் மட்டும் போதாது...
அவளை காதலிக்க காதல் மட்டும் போதாது...
அவளை காதலிக்க காதல் மட்டும் போதாது...
- - -
அவளை காதலிக்கும் அளவு காதல் உலகில் இல்லை...
அவளின் காதலை சொல்லும் சக்தி காதலுக்கு இல்லை...
- - -
எனை தூங்க வைக்க தூக்கமிழ்ந்தாய் நீ...
தூக்கத்திலும் வந்து மகிழ்வித்தாய் நீ...
- - -
மழையில் நனைகிறேன்...
உன் நினைவுகளை மட்டும் அணைக்கிறேன்...
உடல் முழுதும் வியர்க்கிறேன்...
Monday, June 22, 2009
காதல்...கடிதம்...
உன் எதிரி குணா எழுதுவது. உன்னை என் வாழ்நாள் முழுவதும் சந்திக்கவே கூடாது என்று இருந்தேன். அதற்கான காரணம் உனக்கே தெரியும். உன்னை எனக்கு பிடிக்காது. உன் குணம் எனக்கு பிடிக்காது. உனக்கு இருப்பது குணம் அல்ல. அ-குணம்.
- - - - - - - - - - - -
தூரத்தில் ஒருவர் என்னை துரத்திக்கொண்டு வருகிறார். ஒருவர் என்ன ஒருவர்? ஒருவன்.
நான் என் சக்தியையெல்லாம் சேர்த்துக்கொண்டு ஓடினேன், என் சக்தியோடு. காதல் செய்வது குற்றம் என்று இந்த உலகம் எண்ணும் வரை, இந்த உலகில் நிம்மதி இருக்காது.
இரண்டு பேர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்வதில் எவனுக்கு எங்கு வலிக்கிறது என்று தெரியவில்லை.
- - - - - - - - - - - -
கடவுள் எனக்கு ஒரு வரம் கொடுத்தால் அதை உனக்கு பாடம் புகட்ட பயன் படுத்துவேன். உனக்கிருக்கிற ஆணவம், அகங்காரம், மற்றவர்களை ஏளனமாய் பார்க்கும் பார்வை. ச்சீ..மனுசனா நீ? உன்னை போன்ற ஒருவனுடன் என்னால் ஷேர் ஆட்டோவில் கூட பயணிக்க முடியாது.
- - - - - - - - - - - - -
தூரத்தில் துரத்திக் கொண்டு வந்த அந்த ஒருவன் ஒருவன்கள் ஆகி விட்டனர். இலக்கண சுத்தமாய் சொன்னால் பலர் ஆகிவிட்டனர். "இலக்கணம்". என் சக்தி எனக்கு கற்று கொடுத்தது. அந்த மாலை நேர கடற்கரை மணலில் காற்றுக்கு கூட இடம் விடாது நெருங்கி உட்கார்ந்து கொண்டு சக்தி எனக்கு இலக்கணம் கற்று கொடுத்த நாட்களை மறக்க முடியாமல் மூச்சு வாங்குகிறது, தொடர்ந்து ஓடுவதால்...ஆண்டவா இவனுங்க கிட்ட இருந்து எங்கள காப்பாத்து...
- - - - - - - - - - - - -
டே தீயவனே... உனக்கு ஞாபகம் இருக்கா? வகுப்புல யாரோ செஞ்ச தப்புக்காக நான் மாட்டினப்போ ஹெச். எம். சார் அடிக்கு பயந்து என் டிரவுசர் ஈரமாச்சே...அத நீ எத்தன பேர் கிட்ட சொல்லி சிரிச்ச...பயந்தாங்கோலி ஈர பாண்டினு சொல்லி என்ன எவ்ளோ அவமானப்படுத்துன? அப்போல்லாம் உன்ன கொல்லணும்னு எனக்கு தோணும்...உன் நல்ல நேரம்... எங்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட...
- - - - - - - - - - - - -
தூரத்தில் வந்தவர்களை திடீரென்று காணவில்லை. இது வரை ஓடி வந்ததில் நாக்கு, தொண்டையெல்லாம் வறண்டிருந்தது. "என்னால ஓட முடியல குணா" என்று கூட சக்தியால் முழுதாய் சொல்ல முடியவில்லை. அவ்வளவு மூச்சிரைத்தது அவளுக்கு. பாவம் என்னை காதலித்ததால் எவ்வளவு கஷ்டத்தைத்தான் இவள் சகிப்பாள்? என்ன பிறவி இவள்? ஒரு வருடத்திற்கு முன் யாரோவாக இருந்த எனக்காக, அம்மா, அப்பா, குடும்பம் என அத்தனை பேரையும் உதறி தள்ளி வந்திருக்கிறாளே. என்னால் இவளை சந்தோஷமாக வைத்து காப்பாற்ற முடியுமா என்பது கூட உறுதி இல்லையே... நாளைக்கே நான் இறந்து விட்டால் இவள் எங்கே போவாள்? இவள் கதி என்ன ஆகும்?
....ஐயோ...வேளை இல்லாத வேளையில எதெதுவோ தோணுதே.. அதுவும் சுத்த தமிழ்ல..."கொஞ்சம் பொறுத்துக்கோ சக்தி...இன்னும் கொஞ்ச தூரம் ஓடுனாதான் அவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்...கமான்..."
- - - - - - - - - - - - - -
இதையெல்லாம் கூட நான் மன்னிச்சுடுவேன்... ஒரு நாள் என் பைக்குள்ள ஓணான புடிச்சு போட்டு, நான் பையில கை விடும் போது அது என் மேல பாஞ்சு நான் அலறினேனே ...அத பாத்து பயந்தாங்கொள்ளி ஒனான்டின்னு நீ கேலி பண்ணி சிரிச்சியே...எனக்கு ஒரு வாரம் விடாம காய்ச்சல் அடிச்சுதே... உங்கம்மா என்னிக்கோ செஞ்ச நல்ல காரியம்... உனக்கு உயிர் பிச்ச கெடச்சுது...இல்லன்னா உன் சைக்கிள் பிரேக்க நான் புடுங்கின அன்னிக்கு உன் சைக்கிள் டயர் பஞ்சர் ஆகி இருக்காது...
- - - - - - - - - - - - - -
நல்ல வேளையாக அதோ ஒரு வீடு தெரிகிறது. எப்படியாச்சும் கெஞ்சி கூத்தாடி அதுக்குள்ள மரஞ்சுட வேண்டியது தான்... அய்யயோ.. மறுபடியும் அந்த தலைகள் தெரியுதே..."சக்தி.. கொஞ்சம் வேகமா ஓடிவா...அந்த வீட்டுக்குள்ள பொய் ஒளிஞ்சுப்போம்..."
- - - - - - - - - - - - - - -
நீ செஞ்ச பாவங்கள் தாண்டா உன்ன வாழ்க்கைல தோல்வி அடைய வச்சுது. நீ அன்னிக்கு கேலி பண்ணின நான் இன்னைக்கு சமுதாயம் மதிக்கிற ஒரு நல்ல அந்தஸ்துல இருக்கேன். அதுக்கு நீயும் ஒரு வகையில காரணம் தான். நீ என்னை கேலி பண்ணினது எனக்குள்ள ஒரு வெறியா உருவாச்சு... அந்த வெறிய மூலதனமா வச்சு உழைச்சேன்...இன்னிக்கு வாழ்கைல உயர்ந்து நிக்கிறேன்...
- - - - - - - - - - - - - - - -
"வீட்ல யாரவது இருக்கீங்களா?.. ஹலோ....யாராவது இருக்கீங்களா?" வீடு திறந்து கிடந்தது. ஆனால் யாரையும் காணோம். "குணா அவங்க கிட்ட வந்துட்டாங்க... நாம எதாவது பண்ணனும்". "சரி சக்தி.. இங்க உள்ள ஒளிஞ்சிப்போம்...வா..."
உள்ளே நுழைந்து கதைவை தாளிட்டேன்... எங்கள் கெட்ட நேரம் நாங்கள் உள்ளே புகுந்ததை அந்த கூட்டம் பார்த்து விட்டது. இந்த வீடு நோக்கி விரைந்து வந்தார்கள்...அந்த எம தர்மர்கள்...என் இதயம் அடிப்பது எனக்கே கேட்டது...
- - - - - - - - - - - - - - - -
இனிமே வாழ்க்கைல எதுக்கும் பயப்படக்கூடாதுன்னு பல மாதிரி முயற்சி பண்ணினேன்... அதுல கொஞ்சம் வெற்றியும் பெற்றேன்...
- - - - - - - - - - - - - - - -
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. முதலில் அது என் இதயம் துடிக்கும் சத்தம் என்று எண்ணி இருந்துவிட்டேன். ஆனால் நேரம் செல்ல செல்ல சத்தம் அதிகரித்தது. எனக்குள் பயம் வந்துவிட்டது. "குணா இனிமே நம்மால தப்பிக்க முடியாது, போய் கதவ திறப்போம்" என்றாள் சக்தி. எனக்கு காலெல்லாம் உறைந்தது. உடம்பு ஜில்லென்று இருந்தது. ஆனாலும் வியர்த்தது. இன்னும் சிறிது நேரம் கழிந்தால் கதவு உடைந்து விடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு கதவு தட்டப்பட்டது.
- - - - - - - - - - - - - - - - -
இத்தன நாள் இல்லாம நான் உனக்கு ஏன் கடிதம் போட்டேன்னு நீ நினைக்கலாம்...இந்த கடிதம் உன்னை கொஞ்சம் குழப்ப கூட செய்யலாம்... எனக்கு உன் உதவி இப்போ தேவை... இந்த கடிதத்தின் இடை இடையே நீ பார்த்தது நான் எழுதுற ஒரு கதை. இப்போ கதவுக்கு வெளில அந்த கூட்டம் கொல்றதுக்கு நிக்குது. இதுக்கு மேல குணா, சக்தியால தப்பிக்க முடியாது. இப்போ குணா எடுக்குற தைரியமான முடிவுல தான் அவங்க வாழ்க்கையே இருக்கு. எனக்கு இப்போ என்ன செய்யுறதுன்னு பயமா இருக்கு. வழக்கம் போல நீ என்னை கேலி செய். எனக்கு கோபம் வரும். அதனால் வீரம் வரும். எனக்கு தைரியம் வந்தால், குணாவுக்கும் தைரியம் வரும். அவன் அவர்களை சமாளிப்பான்.
உன் உதவியை எதிர்பார்க்கும்,
உன் பரம எதிரி
Saturday, June 20, 2009
சிக்-கிராமக் கல்யாணப் பயணம் - [சிறுகதை போட்டிக்காக]
ஊருக்கு வெளியே தான் பஸ் நிற்குமாம். ஆதலால் நடந்து செல்ல வேண்டி இருந்தது. சுமார் 8 கல் தூரமாம். ஒரு கல் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த பன்னிரண்டு மணி வெய்யிலில் அது ரொம்ப ரொம்ப தூரம் என்பது மட்டும் புரிந்தது. எங்களுடன் வந்த ஆடு, கோழியை தவிர எல்லாரும் என் ஜாதகம் வரை விசாரித்து விட்டார்கள். அதில் ஒருவர் ஒரு படி கீழே சென்று என் ஜாதியை விசாரித்த விதம் நயம். ஒரு மூக்கொழுகி குழந்தை கூட "தோ பார்ரா தொர பொண்ணு பாக்க வர்றாராம்" என்பது போல பார்த்தது. பெரிய வாத்தியார் மட்டும் பல விஷயங்கள் பேசிக்கொண்டே வந்தார். இந்த ஊரின் ஒரே வாத்தியார் இவர் தான் என்று புருடா விட மாட்டேன். முதன் முதலில் இந்த ஊருக்கு வந்த வாத்தியார் இவர்தானாம். அடிக்கடி ஆங்கில வார்த்தை உபயோகித்து தானும் படித்தவர் என்று புரிய வைத்தார். ஆனால் அந்த ஆங்கிலம் தமிழ் போன்று இருந்ததால் எனக்கு தமிழ் புரியும் சார், நீங்க தமில்லையே பேசலாம் என்றேன். நான் இவ்வளவு விஷயங்கள் கூறுவது பலருக்கு அலுக்கலாம், எரிச்சல் வரலாம். உங்களில் சிலர், நான் பெண் பார்க்க சென்ற இந்த கதையை ஏசி அறையில் படிக்கலாம். அப்பவே அப்படி எரிகிறதென்றால் இந்த வெயிலில் எனக்கு எப்படி இருந்திருக்கும்? அந்த பெண் வீட்டைப்பற்றி நான் கேட்காமலேயே பல விஷயங்கள் தெரிய வந்தது. அவள் பிறந்தது முதல் அவளுக்கு விசேஷம் நடந்த நாள் வரை மக்கள் பேசி தீர்த்து விட்டார்கள். (சுய குறிப்பு :- கிராம பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது என் லட்சியம். அதற்காக நான் அரவிந்த் சாமி போல் இருப்பேன் என்று எண்ண வேண்டாம். அந்த பக்கம் ஒரு மதுபாலா கிடைக்காதா என்ற நப்பாசை தான்...)
நாங்கள் செல்லும் வழியில் ஒருவர் மாட்டை ஓட்டி சென்றார். எனக்கு ஏதோ ஒன்று உறுத்தவே, இது என்ன மாடுங்க என்றேன். அது வண்டி மாடுங்க தம்பி என்றார் ஒரு பெரியவர், தான் பெற்ற மூக்கு பொடியை வையகத்துகெல்லாம் பரப்பிக்கொண்டு. வண்டி மாடு சரிங்க. என்ன மாடு? பசுவா? காளையா? மடுவும் இல்ல.... என்றபடி இழுத்ததற்கு சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தை பெரிய வாத்தியார் சொன்னார். அய்யய்யோ அப்படி பண்ணினா செத்துடாதுங்களா என்று கேட்டுக்கொண்டே கடவுளுக்கு நன்றி சொன்னேன். என்னை மாடாய், அதுவும் காளை மாடாய், அதிலும் "அடிக்கப்பட்ட" வண்டி மாடாய் படைக்காததற்கு.
ஆறு கல் கடந்தாயிற்று. இந்த நேரத்தில் என் சிந்தனையை சற்று யோசிப்பில் செலுத்தினேன். வேறு வழி? கிராமத்துக்கும் நகரத்துக்கும் பெரிதாக ஒன்றும் வேற்றுமை இல்லை. அங்கு ங்கோ*தா. இங்கு *க்காலி. அங்கு மாவா. இங்கு சீவல். அங்கு பின் தூங்கி பின் எழல். இங்கு முன் தூங்கி முன் எழல். மற்றபடி அங்கும் இங்கும் செல் போன் இருக்கிறது (அதிக ஒலியில் அலறும் சைனா செல் போன் அதிகம்). இருவரும் முறையே நமீதா, தமன்னா, சினேகாவை ரசிக்கின்றனர்.
நகரங்களில் திறந்த நிலை பல்கலைகழகம் உண்டு. கிராமங்களில் திறந்த நிலை வகுப்பறையும், வேறொரு அறையும் உண்டு என்பதை அடிக்கும் துர் நாற்றத்தையும் சென்னை பேசின் பிரிட்ஜ் கருவாட்டு கடைகளில் காய வைக்கப்பட்டிருக்கும் கருவாடுகள் போல் காய்ந்து கிடக்கும் “அவற்றையும்" (சிறு வயதில் "அவற்றுக்கு" ஜிலேபி என்று பெயரிட்டதாய் ஞாபகம்) பார்த்தாலே தெரிகிறது. இந்த நாற்றத்திலும் ஒருவர் மாம்பழத்தை ரசித்து ருசித்தபடி சப்பிக்கொண்டே வருகிறார். உவ்வே... மழைக்காலங்களில் தெருவில் தேங்கி இருக்கும் நீரில் கால் படாமல் கற்களில் கால் வைத்து தாண்டியபடி செல்வார்களே, அது போல நான் ஜாக்கிரதையாக தாண்டிகொண்டிருந்தேன் “ஜிலேபிக்கு” பயந்து. மாம்பழ பார்ட்டி “இவை” எதையும் கண்டுகொள்ளவே இல்லை. இதுக்கெல்லாம் நாங்க சளைச்சவங்களா என்பது போல் ருசிப்பதில் தன் லட்சியத்தை செலுத்தினார். அது மட்டுமின்றி மற்றொரு மிகப்பெரிய ஒரு ஆச்சர்யகரமான விஷயம் எனக்கு கிடைத்தது. அது என்னவென்றால்....அடடே...அதற்குள் கிராமம் வந்துவிட்டதே... அதை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.
அந்த ஊரில் உள்ள வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் (ஒரு கை விரல்கள் போதும்). எந்த வீட்டிலும் கதவுகள் இல்லை. சாமி உத்தரவாம். டிவிக்காரர்கள் வந்து படம் எல்லாம் எடுத்து சென்றதாக சொன்னார்கள். அதே சமயம் அங்கு திருட்டு பயமும் இல்லையாம். திருட இங்க என்னடா இருக்கு என்று கேட்க தோன்றியது. கேட்டால் பெண் தரமாட்டர்களோ என்று பயம். ஒரு வழியாக அந்த வீட்டை கண்டு பிடித்துவிட்டேன். வீட்டு வெளியில் ஆடு கட்டப்பட்டு இருந்தது. கோலம் போடப்பட்டு "வறுக வறுக" என்று தெளிவாய் எழுதப்பட்டு இருந்தது. அந்த வீட்டினுள் நுழைந்தேன். சிறு குடிசை. குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டும். சுவரில் ஒரு தாத்தாவின் படம். என் வருகையை எதிர்பார்த்து வீடு சுத்தம் செய்யப்படிருப்பதை உணர முடிந்தது. அந்த குடிசைக்குள் அறை எல்லாம் இல்லை. ஆதலால் உள்ளே நுழைந்த போதே "பெண்" இருந்தாள். முதுகை என் பக்கம் காட்டியபடி சுவர் நோக்கி திரும்பி இருந்தாள். இது என்ன லாஜிக்கோ தெரியவில்லை. வழக்கமாய் பேசும் அத்தனை விசயமும் பேச பட்டுக்கொண்டிருக்கும்போது வீடு வாசலில் ஒரு குரல் (அலறல் என்று சொன்னால் தகும்) கேட்டது. அதை கேட்டதும் அத்தனை பேருக்கும் எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தெரியவில்லை கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே ஓடினர். என்னை ஒரு ஜீவனாகக்கூட யாரும் மதித்ததாய் தெரியவில்லை. (முதலில் ஓடியது என் அந்த வருங்கால மனைவி தான்). அந்த அலறல் என்ன என்பதை ஒரு நொடி மனதில் ஓட்டிப்பார்த்தேன். " ஓடியா ஓடியா....(அப்புறம் அலறல்)..." குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஊரே ஒன்று கூடி இருந்தது ஒரு சிறிய ஆழ குழாயடியில்.
"கு**டி கழுவ தண்ணி இல்லாத ஊர்ல எவன் குடியமத்த வருவான்" என்று பெரிய வாத்தியார் ரைமிங்காக சொன்னது நினைவுக்கு வந்தது.
[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
Sunday, May 24, 2009
ஹே ராம்...
"அட... கனவுல இவ்ளோ விஷயம் இருக்கா...காதம்பரி...இங்க பாரேன்..." என்றவாறு புத்தகத்தில் இருந்த துணுக்கு செய்தியை மனைவியிடம் காட்டினான் ராவை. ராவை அவனது புனை பெயர். புனை பெயர் வைத்து கொண்டதால் தன்னை எழுத்தாளர் ஆக்கிக்கொண்டான் . ராவையை விரித்தால் ராஜேஷ் வைரபாண்டியன் வரும். எப்போதாவது மட்டமான கதை எழுதும் பட்சத்தில் "உங்க பேர் பாலு விஜயசேகரன்னு இருந்திருக்கலாம்" என்பாள் காதம்பரி. "ராஜேஷ் வைரபாண்டியனுக்கு என்னடி கொறை" என்பான் விவரமாய்.
துணுக்கை கண்ட காதம்பரி, "இப்போ என்ன செய்ய போறீங்க இத வச்சு என்றாள்"
அந்த துணுக்கு :-
தையல் மிஷினில் உள்ள ஊசி ஒரு கனவை அடிப்படையாய் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
"இதே போல நானும் கனவு கண்டு ஒரு கதை எழுத போறேன். ஒரு முக்கியமான விஷயத்த வச்சு" என்றான் ராவை. பதிலுக்கு காதம்பரி ராவையை ஒரு பார்வை பார்த்தாள். மனைவிகள் உலகத்தில் அதற்கு அர்த்தம் "மவனே நீ எங்கயோ நல்லா வாங்க போறே" என்று அர்த்தம்.
நல்ல மதிய வேளையில் வயிறு புடைக்க உண்டபின் ஒரு தூக்கம் போட்டான் ராவை. அவன் நினைத்தது போலவே ஒரு கனவு வர ஆரம்பித்தது. ஆனால் ராஜபக்ஷேவை எதற்கு நமீதா நாயை கட்டும் சங்கிலியால் கட்டி இழுக்க வேண்டும் என்று யோசிப்பதற்குள் கனவு கலைந்தது.
"ச்ச... எதுவும் தேறாது போலயே..." என்ற சலிப்போடு எழுந்தான்.
அடுத்த சில நாட்கள் எஸ்.ஜே. சூர்யா கா.ம. கட்சி (காக்கும் மக்கள் கட்சி) ஆரம்பிப்பதாகவும், ஜே. கே. ரித்தீஷுக்கு பத்மஸ்ரீ கிடைப்பது போலவுமே கனவுகள் வந்தன.
கடுப்பாகிப்போன ராவை, பிறகு தூங்கும் திசையை மாற்றினான்.
இப்போது ஒரு வித்தியாசமான கனவு வந்தது....
சுற்றிலும் அமைதியான இடம். எங்கு பார்த்தாலும் மரம் செடி கொடிகள்; ஆனால் கருப்பு வெள்ளை நிறத்தில். அப்போது அங்கு ஒருவர் வந்தார். தெளிவான, அமைதியே உருவான முகம். புன்முறுவல் தவழும் கண்கள் என, சென்னை வளர்த்த தமிழில் சொன்னால் டக்கராக இருந்தார்.
அவரை நெருங்கினான் ராவை. "நீங்க..." என்று இழுத்தான். மெலிதான புன்முறுவல் செய்து, "என்னை நீங்கள் ராமர் என்று அழைப்பீர்கள் " என்றார் அவர்.
"ராமர்??? கடவுளா?" என்று ஆச்சர்ய கேள்வி கேட்டான் ராவை.
"அப்படியும் உங்களால் அழைக்கப்படுபவன்" என்றார் அவர்.
"சாமீ... ஒரு சந்தேகம்..." இழுத்தான்...
"நீ காண்பது கனவு. அதுதான் இங்கு உள்ளவை அனைத்தும் கருப்பு வெள்ளையில் தெரிகிறது" என்று பதிலுரைத்தார் அவனின் சந்தேகத்தை உணர்ந்தவராய்.
"ஆஹா சாமி... நீங்க உண்மையிலேயே சாமிதான்...எப்டி கண்டுபிடிச்சீங்க என் சந்தேகத்த...சாமீ...இன்னொன்னு..."
மீண்டும் புரிந்தவராய்..."கனவுகள் கருப்பு வெள்ளையில் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அதற்கு நானும் கட்டு பட்டவனே. அதை விட முக்கியம் இப்போது நான் உனக்கு வர்ணத்தில் தெரிந்தால் என்னை எதாவது ஒரு மதத்திற்குள் அடைத்துதான் பார்ப்பாய். நிறத்தில் கூட மதங்கள் உருவாக்கியவர்கள் நீங்கள். நான் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்" என்றார்.
"சாமீ ..." என்றவனாய் அவரின் காலில் விழுந்தான்.
அவனை தூக்கி விட்ட அவர், "இன்னும் நீ கேட்க வேண்டிய கேள்வி உண்டு வைரா என்றவர், தந்தை பெயரை முன்னால் வைத்துக்கொள், நீ ஜொலிப்பாய். எப்போதும் மூத்தவர்களுக்கு பின் தான் நீ செல்ல வேண்டும்"
மீண்டும் "சாமீ..." என்று விழ முனைந்தவனை... "கண்ட்ரோல் யுவர் செல்ப்" என்று பிடித்தார்.
"சாமீ... எனக்கு ஒரே ஒரு கொறை தான்... இவ்ளோ நல்லவரா இருக்கீங்க, ஆனா உங்க பேர்ல தான் நெறைய பிரச்சனை நடக்குது. உங்களுக்காக கோயில் கட்டணும்னு சிலர் அடிச்சிக்குறாங்க, கூடாதுன்னு சிலர் அடிச்சிக்குறாங்க. இதுல என்ன கொடுமைனா ரெண்டு குரூப்புமே கடவுள் நம்பிக்க உள்ளவங்க" என்றான்.
மீண்டும் ஒரு புன்னகை செய்து... "கோயிலா? எனக்கா? ஹஹ்ஹ... ஆட்சியையே விட்டு குடுத்துட்டு காட்டுக்கு போனவன் நான்... எனக்கு கோயில் கட்ட சண்டையா... ஆட்சியையே தானம் பண்ணின நானா உங்க கோயிலுக்கு அலைவேன்? …"
"நேரங்காலம் இல்லாம எரும மாடு மாதிரி தூங்குரத பாரு, ஒரு பொறுப்பிருக்கா... என்ன மனுசன் நீங்க..." என்று திடீரென்ற மனைவியின் வசை கேட்டு, கனவு கலைந்த துக்கத்தில் எழுந்தான் வைரா என மாறப்போகும் ராவை.
கனவில் கண்ட விஷயத்தை எல்லாம் மனைவியிடம் கூறி, இதை கதையாக எழுதி பத்திரிகைக்கு அனுப்ப போவதாகவும் சொன்னான்.
"தாராளமா இத கதையா எழுதுங்க. ஆனா ஒரு ரெண்டு நாள்ல நான் எங்க அம்மா வீட்டுக்கு போய் சேப்டி ஆகிடுறேன். அதுக்கப்புறம் எழுதுங்க. என்னால ஆட்டோ , உருட்டு கட்டையடி எல்லாம் தாங்க முடியாது" என்றவாறு தலையிலடித்துக்கொண்டாள்...
Thursday, April 30, 2009
சில நேரங்களில் சில கடிதங்கள்...
முதலில் சாதராணமாக ஆரம்பித்த இந்த கடிதம், படித்து முடிக்கையில் என்னுள் ஏதோ ஒரு வலியை உண்டு பண்ணியது. இதை படித்து முடியுங்கள். பிறகு சொல்கிறேன் என்னுள் விழுந்த தாக்கத்தை... (என்) பாதுகாப்பு காரணம் கருதி சில குறிப்புகளை அழித்து விட்டேன் (நன்றி: போட்டோ ஷாப்) .
இது 90களில் எழுதப்பட்ட கடிதம். ஈ மெயில்கள் வழக்கில் வராத காலம். (கடிதம் பெரிதாக தெரிய படங்களை புதிய விண்டோவில் திறக்கவும்)


சற்று சிந்தித்து பாருங்கள்... இந்த கடிதம் நவாஸ் வெளியூர் (ஏதோ ஒரு வட இந்திய மாநிலம் என்று தெரிகிறது) சென்ற பின் எழுதப்பட்ட முதல் கடிதம். இது நவாஸ் கையில் கிடைத்ததா? பத்மாவின் முகவரி நவாசுக்கு கிடைத்ததா? அவர்களின் காதல் என்ன ஆகி இருக்கும்?
பத்மா - நவாஸ்; ஹிந்து முஸ்லீம் காதல். ஆதலால் நிச்சயம் பல பிரச்சனைகள் இருந்திருக்கும். எப்படி சமாளித்தார்கள்?
பத்மாவுக்கும் நவாசுக்கும் இப்போது வயது சுமார் 40 ஐ நெருங்கி கொண்டிருக்கும். அவர்கள் இப்போது எங்கே? என்ன ஆனார்கள்? அவர்கள் காதல் ஜெயித்ததா? திருமணம் நடந்ததா?
திருமணம் நடந்திருக்காவிட்டால் அவர்களின் மனோ நிலை இப்போது எப்படி இருக்கும்?
இந்த கடிதத்தில் வரும் "டெய்லர்", "அய்யர்", "ஜனா" இப்போது எங்கே? அவர்கள் என்ன ஆனார்கள்? இன்னும் இவர்கள் அனைவரும் தொடர்பில் இருக்கிறார்களா?
இது போன்று மேலும் பல கேள்விகள் என்னை தூங்க விடாமல் செய்கின்றன.
இது ஒன்றும் காவிய காதல் கடிதம் இல்லை. ஆனால் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த கடிதத்தின் காதலர்கள் இப்போது எங்கே , எப்படி இருப்பார்கள் என்று நினைக்கும் போது ஏதோ ஒரு வலி வருகிறது.
ஒரு கோலிவுட் காதல் திரைப்படம் எடுக்கும் எல்லா தகுதியும் இந்த கடிதத்திற்கு, காதலுக்கு இருக்கிறது.
இந்த கடிதத்தின் விளைவுகள் குறித்த குறிப்பு இந்த வலை பதிவின் தலைப்பில் உள்ளது.
Tuesday, April 21, 2009
காக்க காக்க - தி போலீஸ்...
"இதுக்கெல்லாம் அனுபவிப்பீங்கடா" என்றான் பக்கிரிசாமி.
அவன் சொல்லி முடிக்கு முன் கன்னம் சிவக்க பளார் பளார் என்று விழுந்த அறை, 60 வாட்ஸ் பல்பு வெளிச்சமும், பல நாள் பூட்டிகிடந்ததால் குப்பென வீசும் ஒரு வித நெடியும் கலந்த அந்த அறையின் அசாதாரண இயல்பை சற்றே சிதைத்தது. ஆறுச்சாமி ஒரு சிறிய ஊசியை பக்கிரியின் நகக்கண்ணில் ஏற்ற, பக்கிரி அவன் தாயை சத்தமாக அழைத்தான். "அந்த லத்திய எடு" என்று கூறி பக்கிரியின் உடம்பைப் பதம் பார்த்தார் அன்பு செல்வன். "மாமூல் வாங்குறது, திமிரெடுத்து சுத்துறது, அப்பாவி மேல பாயுறது... இந்த பொழப்பு பொழைக்குறதுக்கு **டியாத்தனம் பண்ணி பொழைக்கலாம்டா" என்றவாறு மேலும் பல உத்திகளை கையாண்டு பக்கிரியின் உடம்பில் பாத்தி கட்டினார் அன்பு. "போலீஸ் மேலயா கை வைக்குறீங்க... டிபார்ட்மெண்ட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? எங்க இன்ஸ்பெக்டர் உங்கள உயிரோட விடமாட்டாரு" என்றான் மேற்சொன்ன பிழைப்புகள் செய்து வந்த ஏட்டு பக்கிரிசாமி. "யாரு இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் தானே... அடுத்து நாங்க தூக்க போறது அவனத்தான். சாமி இவன முடிச்சுடு" என்று கூறி சென்றார் புதிய உலகம் போராட்ட குழு தலைவர் அன்புசெல்வன்.
ச்சாரு...
"இங்க பாருங்க எப்பிடி பார்த்து சிரிக்கிறான்னு..." என்று குழந்தை சாருலதா என்கின்ற ச்சாரு என்கின்ற குட்டிமாவை கொஞ்சிக்கொண்டு இருந்தாள் ரஞ்சனி. இவை எதையும் சட்டை செய்யாமல் சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான் சிவா (சமீபத்தில் ஒரு "இது" க்காக ஷிவா என்று தன் பெயரை மாற்றிகொண்டான் டைரக்டர் ஷங்கரைப்போல்). ச்சாரு அந்த வீட்டின் புதிய வரவு. ஷிவா சமர்த்தாக டை கட்டி சோப்பு டப்பா சைஸ் காரில் பள பள அலுவலகம் செல்பவன். ரஞ்சனி கவிஞர் தமிழச்சி சாயலில் இருக்கும் பொறியியல் மனைவி. ஷிவாவுக்கு பகலில் அலுவலகமும் , இரவில் ரஞ்சனியும், மாலையில் ச்சாருவும் உலகம். ரஞ்சனிக்கு 24 மணிநேரமும் ச்சாருதான் எல்லாம். முன்தினம் இரவு கூட ஷிவா தன் உலகில் சங்கமிக்கையில் "குட்டிமா எழுந்துகிட்டமாதிரி இருக்கு இருங்க வரேன்" என்று விலகி சென்றவளை கெட்ட வார்த்தையில் திட்டி தீர்த்து இறுதியில் காலில் விழுந்தான்.
இரு பொறியியல்கள் பொறித்த பொரியலாதலால் ச்சாருவின் அறிவு மிகவும் மணத்தது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாள். அவளின் கேள்விகள் அசுர வேகத்தில் வளர்ந்தன. சமயத்தில் ரஞ்சனி பதில் சொல்ல திணறி "டேய் மச்சான்... அவசரம், ஃ ப்ரீயா இருந்தா கால் பண்ணு" என்று ஷிவாவிற்கு குறுந்தகவல் அனுப்புவாள்.
அவர்கள் இருவரும் புத்தகம் படிப்பவர்கள் ஆதலால் வீட்டில் இண்டு இடுக்கில் எல்லாம் புத்தகம் இருந்தது. ச்சாரு புத்தகம் படிக்க கற்றுக்கொண்டாள், இரண்டரை வயதில். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ச்சாருவும் ச்சாருவின் திறமையும்தான் விருந்தானது. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலை ஓசை, பால் வீதி, அழகின் சிரிப்பு ஆகியவை ஐந்தாம் வயதில் ச்சாரு படித்து முடித்த புத்தகங்களில் சில. இது தவிர ஆங்கில விஞ்ஞான நூல்கள் பலவும் சேரும். ச்சாருவிற்கு விளக்கம் சொல்லவே பல புத்தகம் படிக்க வேண்டியதாயிற்று ரஞ்சனிக்கும் ஷிவாவிற்கும்.
நாட்கள் செல்ல செல்ல ச்சாருவின் போக்கில் பல மாற்றங்கள் தெரிந்தன. அவள் மற்ற குழந்தைகளோடு விளையாடுவது நின்றது. பெரும்பாலும் புத்தகம் அல்லது இண்டர்நெட்டில் நேரம் செலவழித்தாள். எதாவது கேட்டால், "உடம்பு ஃ பிட்நஸ்க்கு தான் விளையாடுறோம். நான் தான் டெய்லி எக்சர்சைஸ் பண்றேனே" என்று கூறுவாள். இது போன்ற பல விநோதங்களுக்கும் விளக்கங்களுக்கும் பழக்கப்பட்டு போனாள் ரஞ்சனி.
பள்ளியிலிருந்து பாராட்டுக்களும் கண்டிப்புகளும் மாறி மாறி வந்தன. பின்னே, ஒரு குழந்தை சார்பியல் தத்துவம் பேசினால் எந்த இரண்டாம் வகுப்பு ஆசிரியருக்குதான் கோபம் வராது. ஒரு முறை ஹோம் ஒர்க் முடிக்காததற்கு அவள் சொன்ன விளக்கம் அடுத்து வந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் சல சலப்பை ஏற்படுத்தியது. கேயாஸ் தியரியையும், அவளின் தாத்தா சிறு வயதிலேயே காலமானதையும் தொடர்பு படுத்தி ஹோம் ஒர்க் எழுதாததற்கு காரணம் சொல்லி சிரித்ததால் வேறு என்ன நடக்கும்?
இப்படி பல விஷயங்கள் ரஞ்சனி, ஷிவா வாழ்கையில் வழக்கமாயின. ச்சாருவின் குணங்கள் ஒரு ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் ரோபோட் வகையை சார்ந்தது என்றும் கூற முடியாது. பிஞ்சிலேயே பழுத்திருக்கு பாரு என்றும் கூற முடியாது. ஆனால் இவை இரண்டும் கலந்த குழந்தை எனலாம்.
அவள் படித்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. எல்லா பள்ளிகளையும் போல் இதிலும் குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிடத்தக்க மூன்று பிள்ளைகள். குழந்தை ஒன்று:- எல். கே. ஜி. "பி" பிரிவு. சுரேஷ் குமார். "மை நேம் இத் துறேத் குமார் . அயாம் தடியிங் இன் எல் கே ஜி. பி தெக்தன். தவகர்லால் நேரு ஈத் அவர் ஃபத் ப்ரைம் மிநித்தர்...ஐ லவ் நேரு தத்தா வெரி மத். தாங்க் யூ"
குழந்தை இரண்டு :- யூ. கே. ஜி. "டி" பிரிவு சுபா . "வாடா மாப்பிள்ள வாழபழ தோப்பில்ல..." என்று பின்னணி இசைக்க, பெற்றோர் முன் வரிசையில் மெய் மறந்து ரசிக்க. அர்த்தம் புரியாது சாவி கொடுத்த பொம்மை போல் ஆடிக்கொண்டிருந்தாள். மூன்றாவது (உலக கதைகளின் வழக்கப்படி) ஐந்தாம் வகுப்பு பி பிரிவு ச்சாரு வந்தாள். "குட் மார்னிங் டு எவெரி ஒன். டுடே அயாம் கோயிங் டு ஷேர் மை தாட்ஸ் அபௌட் எஃபெக்ட் ஆஃப் குளோபலைசேஷன் இன் தர்ட் வேர்ல்ட் கண்ட்ரீஸ்..." என்று ஆரம்பித்து 23 நிமிடங்கள் உரையாற்றினாள். அங்கு தலைமையேற்று வந்திருந்த வீ ஈ ஓ உட்பட பலரின் கண்களில் வெண்ணிற பட்டாம்பூச்சிகள் பறந்தன.
அடுத்த நாள் ச்சாரு குடும்பத்தோடு தன் தந்தையின் சோப்பு டப்பா (இந்த பெயர் வைத்தது ச்சாரு) காரில் பிர்லா ப்லானடோரியம் சென்று திரும்புகிற வழியில் ஒரு லஞ்ச லாவண்ய மணல் லாரி மோதி காரில் "கா" நசுங்கி "ர்" மட்டும் மிச்சம் இருந்தது. மயங்கிய நிலையில் ச்சாரு கிடக்க, ரத்தத்தோடு உறவாடி ரஞ்சனியும் சிவாவும் உறைந்திருந்தனர். ச்சாரு மயக்கமுராவிட்டால் கேயாஸ் தியரியையும் லஞ்சத்தையும் மாமூல் போலீஸ் காரர்களையும் ஈகுவேட் செய்திருப்பாள்.
ஆஸ்பத்திரி. இரு உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. மெதுவாக வெளியே வந்த ச்சாரு சற்று நேரம் உடல்களைப் பார்த்து விட்டு அமைதியாக தனது அறைக்கு சென்று புத்தகம் படிக்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் அங்கு வந்த அவளின் பாட்டி, "கண்ணு... இங்க வாடா ராஜா" என்று அரவணைத்தாள். "இல்ல பாட்டி பரவால்ல, நீங்க போயி மத்தவங்கள கவனிங்க" என்றாள்.
"கொழந்தை எப்படி தாங்கப்போகுதோ... இப்படி பாதியில விட்டுட்டு போய்டுச்சுங்களே" என்றவாறு அழுதபடி மூக்கை சிந்தினாள்.
"அழாதிங்க பாட்டி. இந்த அண்டத்துல இருக்குற எல்லாத்துக்குமே ஒரு காரண காரியம் இருக்குன்னு வேய்ன் டயர்னு ஒரு அறிஞர் சொல்லிருக்கார். வந்த காரணம் முடியாம எந்த ஒரு விஷயமும் இந்த உலகத்த விட்டு போகாது. முடிஞ்சுடுச்சுனா ஒரு நிமிஷம் கூட இருக்காது, ரஜினி டயலாக் மாதிரி இருக்குல்ல" என்று சொல்லி சிரித்து புத்தகத்தில் மூழ்கினாள்.
அவள் பாட்டியையும் மெல்ல மெல்ல தயார் செய்ய ஆரம்பித்துவிட்டாள்...
